படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

30 மார்., 2011

பழனிபாபா: விதையாய் விழுந்தவர்! ஆளூர் ஷாநவாஸ் கட்டுரை

''I Plead Guilty - நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்''.

அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகளின் அராஜகம் பாயும் போது அதை தட்டிக் கேட்பது அயோக்கியத்தனம் என்றால், நான் மிகப்பெரும் அயோக்கியனே!

முஸ்லிம்கள் மீது திராவகம் வீசப்படுவதை தடுக்கப் போனது தீவிரவாதம் என்றால் நான் மாபெரும் தீவிரவாதியே!

ஜனநாயக உரிமைகளைக் கேட்பது சாதிவெறி என்றால் நான் மாபெரும் சாதி வெறியனே!

சகோதரத்துவம் போற்றுவது, சட்டவிரோதம் என்றால் நான் சட்ட விரோதியே!

இஸ்லாத்தின் மாண்புகளை கூறுவது மதவெறி என்றால் நான் மாபெரும் மதவெறியனே!...







1988 ஆம் ஆண்டு...


அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது.

கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே
கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர்.

சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள்.

ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய அவரது ஆழமான அறிவும்; பைபிளைப் பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குர்ஆன் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு அனைவரும் வியந்தனர்.

தனது அறிவாலும், மேடை ஆளுமையாலும் அமெரிக்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற அவர், 'தவறுகளைக் கண்டு திமிறி எழும்' தனது இயல்பு குணத்தை அங்கேயும் வெளிப்படுத்தினார்.

அமெரிக்கர்களிடையே நிலவும் ஒழுக்கச்சீர்கேட்டையும்,கலாச்சார சீரழிவுகளையும் சுட்டிக்காட்டிய அவர், ஒழுக்கவியல் நிறைந்த வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துரைத்தார். எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியவராகவும், முன் கோபக்காரராகவும் இருந்த அவர், தனக்கேயுரிய வேகத்தில் அமெரிக்கர்களைச் சாடியபோதும், அம்மக்கள் அவர் மீது வெறுப்படையாமல், அவரது கருத்தில் இருக்கும் உண்மைகளையும், நியாயத்தையும் உணர்ந்து தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டனர்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியோடு அவரைத் திருப்பி அனுப்பாமல், பிலடெல்பியா மாகாணம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்,அந்தத் தமிழர்.

அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர் குடிப்பதை மறந்தார்கள்;
தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்; ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்; இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா.

1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.
'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.

அவர் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது பெயரை உச்சரிக்கவோ; அவரது பங்களிப்புகளை நினைவு கூரவோ; அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை.

இரத்த தான விழாக்களில் மூழ்கிப் போயிருக்கும் இயக்கங்கள், 'முஸ்லிம்களின் இரத்தம் குடித்த இந்துத்துவ மதவெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு' ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக் கூட எடுக்கவில்லை.

பழனிபாபா என்றால் கலவரத்தை விதைத்தவர்; இளைஞர்களை வழி கெடுத்தவர்; தவறான முன்னுதாரனங்களுக்கு உரியவர் என்றெல்லாம் அவர் குறித்து மோசமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவரது பன்முக ஆற்றலை மறைத்து, அவரை வன்முறையாளராகக் காட்டும் புனைவுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகையச் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை.

பாபாவின் பாசறையில் வளர்ந்த 'மக்கள் ஜனநாயகக் கட்சி'யினர் மட்டும் தங்களின் வலிமைக்கேற்றவாறு ஆண்டுதோறும் புதுஆயக்குடியில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆனால், பாபாவின் பேச்சையும், எழுத்தையும்,சிந்தனையையுமே இன்றைய தமது செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் பெரிய அமைப்புகள் அனைத்தும், அவரை நினைவு கூராமல் தவிர்த்து வருகின்றன.

இன்றைய இயக்கங்களின் பேச்சும், செயல்பாடும், இலக்கும் இன்றைய இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல.

இன்றைய தலைவர்கள் எதையெல்லாம் பேசுகின்றார்களோ; எந்த செயல் திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றார்களோ; எந்த இலக்கை நோக்கிப் பயனிக்கின்றார்களோ அவற்றையெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர்; இயங்கியவர்; பயணித்தவர், பழனிபாபா.

முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக மட்டுமே போராடுபவர்கள் என்ற கருத்து நிலவிய காலத்தில்,
1980 களிலேயே வெகுமக்களுக்காகக் குரல்கொடுக்கும் மனித உரிமைப் போராளியாக விளங்கினார், பாபா. பேராசிரியர். கல்யாணி போன்ற மனித உரிமை ஆர்வலர்களுடனும், PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளுடனும் இணைந்து, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

நுண்ணிய தளங்களில் இந்துத்துவத்திற்கு எதிராக அழுத்தமானப் பதிவுகளைச் செய்து வரும் பேராசிரியர்.அ.மார்க்ஸை இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகம் நன்றி உணர்வோடு பார்க்கிறது. ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் என்றால் யாரென்றே தெரியாத ஒரு காலத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரைச் சரியாக இனம் கண்டு அடையாளப்படுத்தியவர், பாபா. 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்' எனும் தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய நூலை வெளியிடுவதற்கு பெரும் துணை புரிந்தார், பாபா.

முஸ்லிம்களோடு உறவாடும் பிற சமய-சார்பற்ற தோழமை சக்திகள் பலர் இருந்தாலும், ஆபத்தான வேளைகளில் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதில் தனிச்சிறப்பு உடையவர்கள் என்பதை பாபா மிகச்சரியாகவே கணித்துள்ளார். பாபாவின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்குடையது என்பதை, அ.மார்க்ஸின் இடையறாத களப்பணிகளில் இருந்து நாம் உணர்கின்றோம்.

ஜெயலலிதா ஆட்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது, நீதிமன்றம் நடந்து கொண்ட முறை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சங்கராச்சாரியாருக்கு ஆதரவான நீதிபதிகளின் ஒருபக்கச் சார்பு கடும்கண்டனத்திற்குள்ளானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த நிகழ்வை, பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கணித்து முன்னறிவித்தவர் பாபா.

சங்கராச்சாரியாரைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாபா ஒரு முறை சிறையிலடைக்கப் பட்டார். கைதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் படி பாபாவிடம் பலரும் வலியுறுத்தினர். அப்போது பாபா, 'உயர்நீதிமன்ற நீதிபதி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி எனக்கு நீதி வழங்குவார்' என்று கேள்வி எழுப்பினார். அந்த வகையிலும் பாபாவின் கணிப்பு உண்மையாகிவிட்டதை நாம் நடைமுறையில் கண்டு வருகின்றோம்.



அரசியல் - சமூகப் பணிகளோடு இஸ்லாமிய மார்க்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்கக் கூட்டங்களில் பங்கேற்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைத் தளத்தில் நின்று தமது இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். அதே சமயம் முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமாக முழங்கினார்.

அவரும் வட்டி, வரதட்சணை, அனாசாரம் போன்ற சமூகக் கொடுமைகளை கடுமையாகச் சாடினார். எனினும், அவர் ஒருபோதும் மார்க்கத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை; முஸ்லிம் ஜமாத்துகளைக் கூறு போட்டதில்லை; ஒரே தெருவில் போட்டியாக இன்னொரு பள்ளிவாசலை உருவாக்கி சமூகத்தில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியதில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பையும், முஸ்லிம்களின் ஒற்றுமையையுமே வலியுறுத்தினார்.

பாபாவின் இதழியல் மற்றும் எழுத்துப் பணிகளும் அவரது தொலைநோக்குக்கு சான்றாக விளங்குகின்றன. கிறிஸ்தவம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட பாபா, 'பைபிள் ஒரு ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களிலும் ஈடுபட்டார். அது கிறிஸ்தவத்திலும், பைபிளிலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. 'ராமகோபாலைய்யருக்கு மறுப்பு' எனும் தலைப்பில் பாபா எழுதிய நூல் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார், பாபா.

'புனிதப் போராளி', 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளை நடத்திய பாபா, அவற்றில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச அடக்குமுறைகளையும் 'புனிதப் போராளி' மூலம் அம்பலப்படுத்தினார்.




இவ்வாறு, மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு; பேராசிரியர்.அ.மார்க்ஸ் போன்றவர்களுடன் நட்பு; மூட நம்பிக்கை எதிர்ப்பு; சமூகத் தீமைகள் ஒழிப்பு; நூல்கள் மற்றும் இதழ்கள் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசும் ஊடகப் பங்களிப்பு ; பிற சமய அறிஞர்களுடனான உரையாடல் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணி என எந்த செயல் திட்டங்களின் அடிப்படையில் பாபா இயங்கினாரோ, அவை அனைத்தையும் ஒன்று விடாமல் காப்பியடித்து, இன்றைய முஸ்லிம் இயக்கங்கள் இயங்கி வருவதையும், செயல் திட்டங்களைக் கற்றுத்தந்த பாபாவை மட்டும் மறந்து விட்டதையும் இன்று காண்கின்றோம்.

பாபாவின் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் கடமையிலிருந்து இயக்கங்கள் தவறி விட்டாலும், இளைஞர்கள் தவறமாட்டோம் என்பதை எடுத்துரைக்கவே பாபாவை மறுவாசிப்பு செய்கின்றோம். ஏனெனில், பாபா இளைஞர்களைத்தான் அதிகம் நம்பினார். இளைஞர்களையே மிகவும் விரும்பினார். 'வரலாறு என்னை விடுதலை செய்யும், வரும்காலம் என் சார்பில் வஞ்சமெடுக்கும்' என்று மேடைகள் தோறும் முழங்கினார். நமக்காக முழங்கியவரை, நமது விடியலுக்காக ஏங்கியவரை நினைவு கூராமல் விட்டால் அது நன்றி கொன்றதாக ஆகிவிடும். ஆகவே, பாபாவை அறிந்து கொள்வோம். அடுத்த தலைமுறைக்கும் அவரை எடுத்துச் செல்வோம்.

1950 நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பழனிபாபா. அஹமது அலி என்பது இயற்பெயர். ஆனால், 'பழனிபாபா' என்ற அடைமொழியே பின்னாளில் அவரது பெயராக மாறிப்போனது. பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம் தான் பாபாவின் தாய் வழிப் பூர்வீகமாகும். பாபாவின் தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சார்ந்தவர். ஊட்டியில் உள்ள ஆங்கிலப்பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும், பெற்றோரின் மறைவுக்குப் பின் புது ஆயக்குடியில் உள்ள தாய்மாமா அப்துல் ரஹ்மான் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

பழனி ஆண்டவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பாபா, கல்லூரி நாட்களிலேயே பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். புது ஆயக்குடியில் நைனா முகம்மது என்பவர் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதுதான் பாபாவின் முதல் மேடை அனுபவமாகும்.

கிறிஸ்தவப் பள்ளிக் கூடத்தில் ஆங்கில வழிக்கல்வி பயின்றதனால் ஆங்கிலப் புலமை மிகுந்தவராகப் பரிணமித்தார் பாபா. எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராகவும்; நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து பார்க்கும் அறிவுடையவராகவும்; துணிவையும், மனோ தைரியத்தையும் இயல்பாகக் கொண்ட தன்னம்பிக்கை மனிதராகவும் சிறந்து விளங்கிய அவர், அத்தகைய பிறவி குணத்தால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தார்.

இந்துத்துவ எதிர்ப்பு; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச் சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை; இஸ்லாமிய கருத்தியல் குறித்த பரப்புரை என தனது கொள்கைகளை வரையறுத்துக் கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமாடினார். தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை. தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் வலம் வந்தார். இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என நாடு நாடாகச் சுற்றினார். அவ்வாறு அவர் சென்ற இடமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். இந்திராகாந்தி முதல் எம்ஜிஆர் வரை எல்லா அரசியல்வாதிகளுடனும் பாபாவுக்குத் தொடர்பு இருந்தது. டாக்டர் ராமதாஸ் முதல் டாக்டர் சேப்பன் வரை எல்லா சமூகத் தலைவர்களுடனும் அவருக்கு உறவு இருந்தது. அ.மார்க்ஸ் முதல் அனீஸ் பாத்திமா [நர்கிஸ்] வரை எல்லா சிந்தனையாளர்களுடனும் அவருக்கு நட்பு இருந்தது.

பாபா, ஒரு பன்முக ஆளுமை. அநீதியைக் கண்டு ஆர்த்தெழும் இயல்பைக் கொண்டவர்.தவறுகள் எங்கே நடந்தாலும் தன் சட்ட ஞானத்தால் தட்டிக்கேட்டவர். இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பிராமணரான ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். தமது தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்காக மக்கள் பணத்தை விரயமாக்கிய ஆர்.வியின் செயலை கடுமையாகக் கண்டித்த பழனிபாபா, 'வெங்கட்ராமன் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்குத் திருப்பி செலுத்த வேண்டும்' என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப்படி அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்த பாபாவை நாடே திரும்பிப் பார்த்தது.

1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் நடைபெற்ற கலவரம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வரவை அறிவிப்புச் செய்தது. 'இந்து முன்னணி' என்ற மாற்றுப் பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். 'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா? மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர். முஸ்லிம்களின் உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வெறிக்கூச்சலிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. கோவை, விழுப்புரம், ஆம்பூர், தேவிப்பட்டினம், ஆத்தூர், சேலம், வாணியம்பாடி, தேங்காப்பட்டினம், திண்டுக்கல், குளச்சல், காயல்பட்டினம், கடையநல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, மேலப்பாளையம், நாகூர் என்று... எங்கு பார்த்தாலும் கலவரம். இந்துத்துவ வெறியர்களின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தகைய இருண்ட சூழலில் ஒளிக்கீற்றாய் உதித்தவர்தான் பழனிபாபா.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அராஜகங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய சமூகத்திற்கு தைரியமூட்டினார், அவர்.
பேசவே பயந்து வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு கேள்வி கேட்க கற்றுத் தந்தார். இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம் போட்டு தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர் கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை விதைத்தவர்.

இந்துத்துவ மதவெறிக்கு எதிராக களமாடிய அதே வேளையில், முஸ்லிம்களை ஒடுக்கிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வீச்சோடு இயங்கினார், பாபா. முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளை துணிந்து அம்பலப்படுத்தி வந்த அவர், இடையறாத சட்டப் போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் மிரள வைத்தார். அச்சத்தின் பிடியிலிருந்த முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

பாபா மீது நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட முறை சிறை சென்று வந்த அவர், எல்லா ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்தார். தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிலேயே கைது செய்யப்பட முடியாத ஒரே மனிதராகவும் அவர் இருந்தார்.

இந்துத்துவ கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயகத் தளத்தில் நின்று எதிர்கொள்ளும் வகையில், பாபா உருவாக்கிய மக்கள் திரளைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள் இந்து முன்னணியினர். பாபாவின் படையை நேருக்கு நேராகச் சந்திக்கும் துணிவற்ற அவர்கள், அதிகாரத்தின் துணையை நாடினார்கள். பாபாவின் பின்னால் அணிவகுத்த இளைஞர்கள் மீது அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது. பாபாவின் ஆதரவாளர்கள் குறிவைக்கப்பட்டனர்; கண்காணிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான உதவிகளைச் செய்தார், பாபா. சிறையிலிருந்த முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து அந்த குடும்பங்களின் செலவினங்களுக்கு மாதந்தோறும் மணியார்டர் செய்து வந்தார். பாபாவின் இத்தகைய குணச்சிறப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் மீது அபிமானம் கொண்டனர். பாபாவின் படை மேலும் வலிமை பெற்றது.

இந்துத்துவத்தை தனியொரு சமூகமாக நின்று எதிர்க்க முடியாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொண்ட பாபா தொடர்ச்சியாக பல வியூகங்களை வகுத்தார். இந்துத்துவத்தால் பாதிக்கப்படும் ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மண்டல் கமிஷனை ஒழித்தது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை எதிர்க்க பிற்படுத்தப்பட்டவர்களே வாருங்கள் என 'டச்சிங்காக' அழைப்பு விடுத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் ஊருக்கு வெளியே சேரியில் ஒதுக்கி வைத்து வதை செய்கின்றது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை வேரறுக்க தலித் மக்களே அணிதிரள்வீர் என உணர்வுப் பூர்வமாக அறைகூவல் விடுத்தார்.

அத்தகைய அறைகூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும், தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும் உறவை வளர்த்துக் கொண்டார். வன்னியர் சமூகத் தலைவரான டாக்டர் ராமதாசுடனும், தலித் சமூகத் தலைவரான டாக்டர் சேப்பனுடனும் இணைந்து களம் கண்டார்.

வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக ராமதாஸ் மாற்றிய போது, பா.ம.கவுக்கு ஒரு வெகுஜன அடையாளத்தைப் பெற்றுத் தந்தவர் பழனிபாபா. தனது ஜிகாத் கமிட்டித் தொண்டர்களை பாமகவில் இணைந்து செயலாற்றும் படி ஊக்கப்படுத்தினார். அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பாமகவில் இணைந்தார்கள்.

அவ்வாறு இணைந்தவர்கள் பட்டி தொட்டியெங்கும் பா.ம.க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த கூட்டங்களில் பங்கேற்று பழனிபாபா முழங்கினார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை நாயகனாக ராமதாசை முன்னிறுத்தினார். வன்னியர் சாதிக்கட்சி என்ற முத்திரையிலிருந்து விலகி, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக பா.ம.கவை அடையாளப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்தார்.

பா.ம.க படிப்படியாக வளர்ந்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ராமதாசின் அரசியல் நடவடிக்கைகளில் மெல்லிய மாற்றங்களும் நிகழ்ந்தன. அறிவுக் கூர்மையுள்ள பாபா அதை உணர ஆரம்பித்தார். ராமதாசிடம் ஏற்பட்ட மெல்லிய மாற்றம் ஒரு கட்டத்தில் வலிமையாக வெளிப்பட்டது. பா.ம.க கூட்டங்களில் பாபா பேசிய பிறகு இறுதியாக ராமதாஸ் பேசுவார். பாபாவின் அனல் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்பவர்கள், அவர் பேசி முடித்ததும் கலைந்து சென்று விடுவார்கள். ராமதாஸ் பேசத் தொடங்கும் போது கூட்டம் சில நூறு பேர்களாகச் சுருங்கி விடும். இதுவும் ஒரு வகையில் ராமதாசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. விளைவு; பாபாவை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள் என பா.ம.கவினருக்கு ராமதாஸ் வாய்மொழி உத்தரவு போட்டார். பாபாவுக்கும் ராமதாசுக்கும் இடையே முரண்பாடு மேலும் அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் பால்தாக்கரேயை ஆதரித்து அறிக்கை விட்டார் ராமதாஸ். மேலும் பாஜக தலைவர்களுடன் நெருங்கத் தொடங்கினார். ராமதாசின் கொள்கைத் தடுமாற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்த பாபா தனது தொண்டர்களிடம், 'முஸ்லிம்கள் பா.ம.கவில் இருக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது' என வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அதையே மேடைகளிலும் எதிரொலித்தார்.

1996, சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்ட கே.எம்.ஷெரீபை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாபா, 'இதுதான் பிற அரசியல் கட்சிக்காக, தாம் பேசுகிற கடைசி பேச்சு என்றும், இனி எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு கேட்க மாட்டேன் என்றும், எதிர்காலத்தில் சமுதாயத்திற்காகவே ஓட்டு கேட்பேன்' என்றும் அறிவிப்பு செய்தார். பா.ம.கவினால் பாபாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தனியொரு அரசியல் கட்சியைக் கட்டமைக்கும் சிந்தனைக்கு அவரைத் தள்ளியது.

எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலை எப்படி வென்றெடுப்பது என்ற ஆய்வில் இறங்கினார். இறுதியில், கேரளாவுக்குச் சென்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் [பிடிபி] தலைவர் அப்துல் நாசர் மதானியை சந்தித்தார். அங்கு முஸ்லிம்களையும், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்த அரசியல் வியூகத்தின் மூலம் வலுவான ஜனநாயக சக்தியாக எழுச்சி பெற்றிருந்த மதானியுடனான பாபாவின் சந்திப்பு, அவருக்குப் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியது.

முஸ்லிம்களையும், தலித்துகளையும், அரசியல் மைய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக மாற்றும் வகையில் தமிழகத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு வந்தார் பாபா. தமிழகத்தில் பி.டி.பியை தொடங்கும் முன்னர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுடன் கலந்தாலோசிக்குமாறு பாபாவிடம் கேட்டுக் கொண்டார், மதானி.

பாபா கொடிக்காலை சந்தித்தார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு பற்றி விவாதித்தார். பாபாவின் முடிவுகளை மகிழ்ச்சியோடு வரவேற்றார் கொடிக்கால். பின்னர் ஜிகாத் கமிட்டியினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், கேரளாவின் பி.டி.பி கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. முடிவில் மதானியின் அரசியல் அஜெண்டாவை ஏற்றுக்கொள்வது என்றும், ஜிகாத் கமிட்டியையே அரசியல் கட்சியாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கட்சியைப் பதிவு செய்வதற்கும், கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும், கிளைகளை விரிப்பதற்கும் பணிகளை முடுக்கி விட்டார், பாபா. தனது பேச்சில் இருந்த வேகத்தைக் குறைத்து, வியூகத்தை கூர்தீட்டினார். தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். பாபாவின் அத்தகைய முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைத்தது. பல மாவட்டங்களில் ஜமாத்துகள் ஒருங்கிணையத் தொடங்கின.

முஸ்லிம்களை ஒருங்கிணைப்பது; தலித்துகளுடன் உரையாடுவது; இரண்டு சமூகங்களும் இணைந்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது என்ற வியூகம்தான் பாபா கையிலெடுத்த கடைசி ஆயுதம். எதிர்காலத்தில் கட்சிகளின் கூட்டமைப்பு வலுவிழந்து விடும் என்றும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்புதான் வலுப்பெறும் என்றும் பாபா கூறி வந்தார். அத்தகைய கூட்டமைப்பை உருவாக்குவது சாதாரண வேலையல்ல என்றும், அது மிகப்பெரும் அர்பணிப்புக்குப் பின்னரே சாத்தியமாகும் என்றும் அவர் முன்னுணர்ந்தார்.

இத்தகைய அரசியல் நிலைப்பாட்டுடன் களப்பணியை நோக்கி பாபா நகரும் போதுதான் திடீரென படுகொலை செய்யப் பட்டார்.

1997, ஜனவரி 28 ஆம் நாள் இரவு பொள்ளாச்சியில் உள்ள பாபாவின் நண்பர் பசுவராஜ் என்கிற தனபால் வீட்டிற்கு பாபா சென்றார். 30 ஆண்டுகால நண்பரான தனபாலோடு சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட, குடும்ப விசயங்களைப் பற்றி உரையாடிவிட்டு இரவு 9.30 மணியளவில் அங்கிருந்து விடைபெற்றார். புறப்படுவதற்கு பாபா தனது ஜீப்பில் ஏறி அமர முயன்ற போது, கையில் சிறிய கோடாலி போன்ற ஆயுதத்துடன் பாபாவை நெருங்கிய அந்த மர்ம மனிதன், திடீரென பாபாவின் தலை,நெஞ்சு,உடல் என சரமாரியாக வெட்டினான். பாபா நிலைகுலைந்து சாய்ந்தார்.

அதிர்ச்சியடைந்த பாபாவின் நண்பர் தனபால், 'டேய் டேய்' என சத்தமிட்டுக் கொண்டே அந்தக் கொலைகாரனை விரட்டினார். அப்போது அவன் 'நீ எனக்கு குறி இல்லை, போடா ஒதுங்கி' என அவரைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். சற்று தூரத்தில் நின்றிருந்த அம்பாசிடர் கார் ஒன்றில் தொற்றிக் கொண்ட அவன் தப்பித்து விட்டான்.
பாபா படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆங்காங்கே கலவரம், கல்வீச்சு, கறுப்புக் கொடி போராட்டம் என எதிர்ப்பு வலுவாக இருந்தது. கனத்த இதயத்தோடும், கண்ணீர் பெருக்கோடும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் திரளுக்கு மத்தியில், பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியில் பாபாவின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.



பாபாவின் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டனர். பாபா கொலை வழக்கை முன்னெடுப்பதற்கும், கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதற்கும் உருப்படியான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.

பாபாவின் ஆதரவாளர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது 'கைது செய்யப் பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல' என்றும், அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், பாபா படுகொலைக்குப் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இருக்கின்றன என்றும் கூறி அதிர்ச்சியளிக்கின்றனர். அது என்ன மர்ம முடிச்சு என்பதை நம்மால் விளங்க முடியவில்லை.

ஆனால், அவரது படுகொலைக்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பாபா, இந்துத்துவ மதவெறிக்கு எதிராக மிகத் தீவிரமாக சொற்போர் நிகழ்த்திய காலங்களில் கொல்லப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி மக்களை அணி திரட்டிய காலத்திலும் கொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களோடு இணைந்து அவர்களின் அரசியல் அமைப்பை வலுப்படுத்த உழைத்த காலங்களிலும் படுகொலை செய்யப்படவில்லை.

மாறாக, எப்போது அவர் பேச்சைக் குறைத்து, செயல் வீச்சை அதிகரித்து, ஜமாத்துகளை ஒருங்கிணைத்து, முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயன்றாரோ அப்போதுதான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அப்படியென்றால், எந்த முயற்சி வெற்றி பெறுமோ; எந்த முயற்சி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விடிவைத் தருமோ; எந்த முயற்சி முஸ்லிம்களுக்கு உரிய பயனளிக்குமோ...அந்த முயற்சியில் அவர் ஈடுபட முயன்றபோதே கொல்லப்பட்டு விட்டார் என்றால், அதன் பின்னணியில் இருக்கின்ற 'அரசியல்' எது என்பதை ஆய்வு செய்தாக வேண்டும்.

இந்துத்துவத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற இரட்டைச் சமூகமான முஸ்லிம்களும், தலித்துகளும் இணைவது இயல்பாகவே சாத்தியமானது. இரு சமூகங்களுக்குமான உறவு இரண்டறக் கலந்தது. இரண்டு சமூகங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுக்கு உரியது. சரியான தலைமைகள் இன்றித் தடுமாறும் நிலைமையை உடையது. நாடு முழுவதும் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும், மக்கள் தொகை அடிப்படையில் ஒருங்கிணைந்த மிகப்பெரிய சமூகங்களாகவும் இருப்பதால், இரண்டு சமூகங்களையும் இணைத்த அரசியல் நடவடிக்கை என்பது இரண்டு சமூகங்களையும் தவிர மற்ற எல்லோருக்கும் சிக்கலானது. இரண்டு சமூகங்களையும் வஞ்சித்து அரசியல் பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் ஆபத்தானதும் கூட.

எனவே, அந்த இணைப்பு அஜெண்டாவை கையிலெடுப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாவார்கள். அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் அகற்றப்படுவார்கள்; அல்லது அழிக்கப்படுவார்கள்.

கேரள மாநிலத்தில், முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் அஜெண்டாவை கையிலெடுத்த மதானி, பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அகற்றப்பட்டார். அதே வழிமுறையை தமிழகத்தில் கையிலெடுக்க முயன்ற பழனிபாபா அழிக்கப்பட்டார்.

பாபாவின் மறைவுக்குப் பிந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியல் போக்கு, இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்தால் அந்த உண்மை நமக்கு விளங்கும்.

பழனிபாபா, தனது பொதுவாழ்க்கைப் பயணத்தில் முதலில் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் அதே எம்ஜிஆர்தான் தமது ஆட்சிக்காலத்தில் பாபாவின் கூட்டங்களுக்குத் தடை போட்டார். ஒவ்வொரு தடையையும் நீதிமன்றத்தில் சென்று அனாயாசமாகமுறியடித்து, வெற்றிகரமாக கூட்டம் நடத்துவார், துணிச்சல்கார பாபா. இதனால் எரிச்சலடைந்த எம்ஜிஆர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணை கொண்டு வந்தார்.

பாபாவுக்கும், எம்ஜிஆருக்கும் இடையிலான முரண்பாட்டைக் கவனித்த கலைஞர், எம்ஜிஆரை எதிர்க்க பாபாவை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் கலைஞருடனும் முரண்பட்டார் பாபா. எம்ஜிஆராவது பாபாவின் கூட்டங்களுக்குத் தான் தடை போட்டார். ஆனால் கலைஞரோ, பாபாவைக் கைது செய்து சிறையிலடைக்கும் அளவுக்கு கடுமை காட்டினார்.
இறுதியில், டாக்டர் ராமதாசோடு நெருங்கிய பாபா, அவரோடும் முரண்பட்டு விலகினார்.

பழனிபாபா, எம்ஜிஆரையும் கலைஞரையும் ராமதாசையும் சமுதாயத்திற்காகவே ஆதரித்தார்; சமுதாயத்திற்காகவே எதிர்த்தார். சுயநல அரசியலையோ, அல்லது பிழைப்புவாத அரசியலையோ அவர் முன்னெடுத்திருந்தால் எந்தத் தலைவரோடும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது. யாரோடும் சமரசமாகி விடாமல் அவர் காத்த கொள்கை உறுதிதான் அவரை தனித்து இயங்க வைத்தது; ஷஹீது அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்தது.

பாபா மிக இயல்பானவர்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். மனதில் பட்டதை பட்டெனச் சொல்லிவிடும் பழக்கமுடையவர். இன்றைய அரசியல் சமூகத் தலைவர்களுக்கு உரிய, இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் அவசியமான 'நடிக்கும் திறன்' பாபாவிடம் இருந்ததில்லை. அவர் வெள்ளந்தியான மனிதராக இருந்தார்.

பாபாவின் உழைப்பை அவரோ அல்லது அவரது இயக்கமோ அறுவடை செய்யவில்லை. உழைப்பைத்தான் அறுவடை செய்யவில்லை; அவரது இறப்பையாவது அவரது இயக்கம் அறுவடை செய்ததா எனில் அதுவும் இல்லை. அவரது இறப்புக்குப் பிறகு அவரது இயக்கமே இல்லை என்ற நிலையாகி விட்டது.

பாபாவின் இறப்பை அறுவடை செய்தவர்கள் யாரென்றால், பாபா வாழும் காலம் வரை அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்பதுதான் மிகப்பெரும் கொடுமை.

பாபாவை, பெண்பித்தர் என்றும், பாபா, முஸ்லிம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்றும் குற்றம் சாட்டி அவருக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டவர்கள்தான் அவரது இறப்பை பக்கம் பக்கமாக செய்தியாக்கி, முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றி இயக்கம் வளர்த்தார்கள். பாபாவின் உண்மையான சமூகப் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்தார்கள்.

ஆனால், பாபாவுக்கு 'ஷஹீது' என்னும் மிகப்பெரிய கண்ணியத்தை வழங்கிய இறைவன், அவர் மீது அவதூறு பரப்பிய தறுதலைகளையோ அசிங்கப்படுத்தினான்.

பாபா, இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று எந்த மனிதர் பாபா மீது அவதூறு வீசினாரோ, அந்த மனிதரைப் பற்றித்தான் 'எங்களை வழிகெடுத்தார் ; எங்களை குண்டுவைக்கத் தூண்டினார்' என்று சிறை மீண்ட இளைஞர்களைப் பேட்டி கொடுக்கச் செய்தான் இறைவன்.

பாபாவை, பெண்பித்தர் என்று யார் விமர்சித்தார்களோ, அவர்களே ஒருவர் மீது ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அசிங்கப்பட்டு, தனித்தனி இயக்கம் காணும் அளவுக்கு அம்பலப்படுத்தினான், இறைவன்.

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பதெல்லாம் வழக்கொழிந்து போன பழமொழியாகிவிட்டது. 'தெய்வமும் அன்றே கொல்லும்' என்பதுதான், பாபாவை எதிர்த்தவர்களுக்கு ஏற்பட்ட இழி நிலையிலிருந்து நமக்குத் தெரியவருகிறது.

பாபா, தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பார். ''I Plead Guilty - நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்''.

அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகளின் அராஜகம் பாயும் போது அதை தட்டிக் கேட்பது அயோக்கியத்தனம் என்றால், நான் மிகப்பெரும் அயோக்கியனே!

முஸ்லிம்கள் மீது திராவகம் வீசப்படுவதை தடுக்கப் போனது தீவிரவாதம் என்றால் நான் மாபெரும் தீவிரவாதியே!

ஜனநாயக உரிமைகளைக் கேட்பது சாதிவெறி என்றால் நான் மாபெரும் சாதி வெறியனே!

சகோதரத்துவம் போற்றுவது, சட்டவிரோதம் என்றால் நான் சட்ட விரோதியே!

இஸ்லாத்தின் மாண்புகளை கூறுவது மதவெறி என்றால் நான் மாபெரும் மதவெறியனே!

என் மக்கள் மீது ஏவப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவது குற்றம் என்றால் நான் மிகபெரும் குற்றவாளியே!'' என்றார் பாபா.

அவர் எந்தக் குற்றத்தை இழைத்தாரோ...
அந்தக் குற்றத்தை நாமும் இழைப்பதுதான்
அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும்!

[சமநிலைச் சமுதாயம் பிப்ரவரி - 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]

29 மார்., 2011

பெரியார் தாசன் @ அப்துல்லாஹ்: பழக்கடையில் போர்க்கருவி!



கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் சவூதி அரேபியா
தலைநகரான ரியாதில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பேராசிரியர் பெரியார் தாசன், அங்கு இஸ்லாம் மார்க்கத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மார்ச் 12 ஆம் நாள் ரியாதில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அதை பகிரங்கமாக அறிவிப்பு செய்தார். பின்னர் புனித மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றினார்.


இறைவனின் புனித மண்ணில் வெள்ளுடைத் தரித்தவராகத் தோன்றிய பெரியார் தாசன், தம்மை ஒரு முஸ்லிமாக பிரகடனம் செய்த காட்சி அனைவரையும் அதிரச் செய்தது. அவரது மனமாற்றம் தமிழகத்தில் மிகப்பெரும் விவாதப் பொருளானது. இந்துத்துவ வாதிகள் அவரை எரிச்சலோடு பார்த்தனர். இறை மறுப்பாளர்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கினர். பணத்துக்காக பெரியார் தாசன் பாதை மாறிவிட்டார் என்று பெரியாரிஸ்டுகளே வசைபாடினர். பெரியார் தாசனை உரிமை கொண்டாடுவதற்கு முஸ்லிம் அமைப்பினர் முண்டியடித்தனர்.


ஒரு தனி மனிதரை மைய்யப்படுத்தி ஏன் இத்தனை பரபரப்பு? ஒவ்வொரு நொடியும் மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, இந்த ஒற்றை மனிதரின் மாற்றத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? ஆளுமைகள் பலர் வந்த போதெல்லாம் ஏற்படாத சலனம், இந்த ஆள் வந்த போது மட்டும் ஏன் ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்குப் பின்னால் இருக்கிறது பெரியார் தாசனின் பன்முகம்.


சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.


சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.


எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.


பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.


தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.


பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.


ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.


பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'கருத்தம்மா' எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.


மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.


இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான 'புத்தரும் அவர் தம்மமும்' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.


'தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது' எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.


'பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்' என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், கடந்த ஆண்டு அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.


பெரியார் தாசன் அப்துல்லாவாக பரிணாமம் பெற்று ஓராண்டு ஆகிவிட்டது. அவர் இஸ்லாத்திற்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை, மிகவும் பரபரப்போடு காணப்படுகிறார். அவரது அலைபேசி பெரும்பாலும் அனைத்தே வைக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டில் இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. எப்போதாவது அவர் தொலைபேசியை எடுத்து விட்டால் ஏதோ ஒரு வெளியூரில் நிகழ்ச்சியில் இருப்பதாக சொல்கிறார். வயதையும், முதிர்ச்சியையும், உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் வெளிநாடுகள், வெளியூர்கள் என்று பம்பரமாக சுற்றிவருகிறார். அவரது பெரும்பகுதிப் பொழுதுகள் பயணத்திலேயே கழிந்து வருகின்றன. அவர் செல்லாத நாடுகளும் இல்லை; சுற்றாத ஊர்களும் இல்லை எனும் அளவுக்கு தினமும் கூட்டங்களுக்கு செல்கிறார்.


கடந்த ஓராண்டாக இவ்வாறு அவர் பயணித்துக் கொண்டிருப்பது முஸ்லிமல்லாத பொதுத்தளத்தில் என்று நினைத்தால் நீங்களும், நானும் ஏமாளிகள். ஏனெனில்,இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே பிசியாக இருக்கிறார்.


இது அப்துல்லா என்கிற ஆளுமையின் தவறா? அல்லது அப்துல்லாவைத் தவறாகப் பயன்படுத்துகின்ற முஸ்லிம் சமூகத்தின் தவறா? என்றால், முழுக்க முழுக்க இது முஸ்லிம்களின் தவறே. ஏனெனில், அப்துல்லா ஒரு போர்க்கருவி. அந்தக்கருவியை பொதுக் களத்திலும், அறிவுத் தளத்திலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் புழக்கடையில் போட்டு வைத்திருக்கிறது தமிழ் முஸ்லிம் சமூகம்.


முரசொலி அடியார் இஸ்லாத்தை தழுவிய போது அவர் அறிவுத் தளத்திலேயே பயணித்தார். சிந்தனையாளர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து தமது மனமாற்றத்திற்கான காரணங்களை எடுத்துரைத்தார். மனம் மாறியதால் தமக்குக் கிடைத்த சமூக அந்தஸ்த்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். சாதியக் கொடுமைகளுக்கு இலக்காகித் தவித்த தலித் கிராமங்களுக்குச் சென்று சமத்துவ இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார்.


அடியாரின் பரப்புரைகள் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுவுடமை இயக்கங்களிலும், சாதி ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்த கொடிக்கால் செல்லப்பா போன்றவர்களை ஷேக் அப்துல்லாவாக மாற்றியது. 1980 களில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வதற்கு அடியார் அப்துல்லாவை சரியான முறையில் பயன்படுத்திய சமூகம், இன்றைக்கு ஏனோ பெரியார்தாசன் @ அப்துல்லாவை மட்டும் தனக்குள்ளேயே சுற்ற வைத்திருக்கிறது.


பெரியார் தாசன் இஸ்லாத்திற்கு வந்ததை முஸ்லிம் சமூகம் பெருமிதத்தோடு கொண்டாடுகிறது. அவரை வரவேற்று தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இறை மறுப்புக் கொள்கைக்காக முழங்கிய பெரியார்தாசன், இஸ்லாத்தின் சிறப்புகளை விதந்தோதுகின்ற அப்துல்லாவாக உருமாறி உரையாற்றுவதைக் கண்டு முஸ்லிம்கள் பூரிக்கின்றனர். அப்துல்லாவின் அனுபவத்தை உள்வாங்கி மனதில் உரமேற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு அது ஒரு வாய்ப்பு என்றாலும்,அதுவே அன்றாடக் காட்சியாகிக் கொண்டிருப்பதுதான் கவலையளிக்கிறது. அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து முஸ்லிம்களுக்கு வகுப்பெடுக்க வேண்டியிருக்கிறது.


இன்று அறிவுத் தளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு, அதிகார வர்க்கம், ஊடகம்,கல்வி, கலை,இலக்கியம்,பண்பாட்டுத் தளம் என எங்கும் எதிலும் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்த நிலையில் இஸ்லாத்தின் தத்துவங்களை வெகுமக்களுக்குச் சொல்லவும், முஸ்லிம்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை உடைக்கவும் வலுவான கருவிகள் நமக்குத் தேவைப் படுகின்றன.பல் துறைகளிலும் ஆழங்கால் பட்ட கருவிகள் நமக்கு அவசியமாகின்றன.


அந்த வகையில் பெரியார்தாசன் எனும் கருவி நாம் தேடிச் செல்லாமலேயே நம்மைத் தேடி வந்திருக்கிறது. பன்முகத்திறன் கொண்ட அந்தக் கருவியை சரியான திசையில் பயன்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது.


அளப்பெரும் சிந்தனைகளை அள்ளித் தெளித்து, கூர்மையாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனால் மட்டுமே நிகழாத சமூக மாற்றம், மக்களை ஈர்க்கும் பேச்சாளனால் நிச்சயம் நிகழும். ஏனெனில்,பேச்சு எளிதில் மக்களை வசீகரிக்கும். பேச்சு விரைவாக மக்களை சென்றடையும். வாசிப்பவர்களால் மட்டும் தான் எழுத்தை உள்வாங்க முடியும். ஆனால், கேட்பவர்கள் அத்தனை பேருக்கும் பேச்சு சென்றடையும்.அதுவும் பாமரனுக்கும் புரியும் படியான பெரியார் தாசனின் எளிய பேச்சு மக்களிடையே மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


இந்துத்துவத்தை தோலுரித்து, மக்கள் கலை இலக்கியக் கழக மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பெரியார்தாசன் பேசிய பேச்சு ஈடு இணையற்ற பேச்சாகும். தத்துவத்துறைப் பேராசிரியரான அவரால் மட்டுமே அப்படியொரு உரையாற்ற முடியும் எனும் அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்திய பேச்சாகும். இப்போது பெரியார் தாசன் அப்துல்லாவாக மாறி விட்டதால் இனி ம.க.இ.க வினர் அவரை கூட்டங்களுக்கு அழைக்க மாட்டார்கள். இந்துத்துவத்தை பொதுத் தளத்தில் நின்று கூர்மையாக எதிர்கொண்ட பெரியார்தாசனுக்கு இனி அந்த தளங்களிலிருந்து அழைப்புகள் வராது. இத்தகைய சூழலில் அந்தத் தளத்தை அவருக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கிறது.


இந்துத்துவத்தைக் களத்தில் எதிர்கொள்ள முஸ்லிம்களிடையே ஏராளமான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளுமைகள் எவரும் இல்லை. அந்தப் போதாமையை போக்க வந்திருப்பவர் தான் பெரியார் தாசன் என்கிற பேருண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


பன்மைச் சமூகத்தில் இஸ்லாமின் செய்திகளை
எடுத்துச் சொல்வது ஒரு கலை. அந்தக் கலையைக் கற்றவர்களால் மட்டுமே அதைத் திறம்படச் செய்ய முடியும். பன்மைச் சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்பவர்களுக்கு, முதலில் பல சமூகங்களைப் பற்றிய ஆழமான பார்வை வேண்டும். பல் சமயத் தத்துவங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். பிற சமயத் தத்துவங்களோடு இஸ்லாம் எப்படிப் பொருந்திப் போகிறது என்பதையும், எங்கெல்லாம் தனித்து விளங்குகிறது என்பதையும் எடுத்துச் சொல்லி பிற சமய மக்களை ஈர்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.


இலங்கை அறிஞர் ஸனீர் சொல்வதைப் போல,
தமிழ்ச் சூழலில் இஸ்லாத்தை சொல்ல வேண்டுமெனில் தமிழிலக்கியங்களிலும், தமிழ்ச் சமயக் கோட்பாடுகளிலும் நிரம்பிக் கிடக்கும் ஏகத்துவக் கொள்கையை மேற்கோள் காட்ட வேண்டும். ஏகத்துவம் என்பது பழந்தமிழர் மரபு; அதைத்தான் இஸ்லாமும் போதிக்கிறது என்று ஒப்பீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கு தமிழ் இலக்கியங்களையும், தமிழ்ச் சமய நூல்களையும் நன்கு புரிந்திருக்க வேண்டும். அத்தோடு இஸ்லாத்தையும் ஆழமாக அறிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம், வெற்று விவாதங்களை நடத்தி, 'பயான்' செய்யும் இயக்க முல்லாக்களால் முடியாத காரியம்.


அத்தகைய அறிவையும், புரிதலையும் கொண்ட ஒரே நபர் இன்றைய நிலையில் தமிழ் முஸ்லிம் சூழலில் பெரியார் தாசன் மட்டும் தான். அவருக்கு திருவாசகமும் தெரியும்; திருக்குர்ஆனும் தெரியும். அவருக்கு பாரதியாரையும் தெரியும்; பெருமானாரையும் தெரியும். அவருக்கு காரைக்கால் அம்மையாரையும் தெரியும்; கதீஜா அன்னையாரையும் தெரியும். எனவே பன்மைச் சமூகத்தில் இஸ்லாம் பற்றிய உரையாடலை நிகழ்த்துவதற்கு முஸ்லிம்கள் அவரை பயன்படுத்த வேண்டும்.


இஸ்லாம் குறித்து பெரியார் பேசியவற்றை இன்று எந்தப் பெரியாரிஸ்டுகளும் பேசுவதில்லை. 'இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து' என்று தீண்டாமை இழிவுக்கு தீர்வைக் காட்டிய பெரியாரின் கருத்தை எந்தப் பகுத்தறிவாளரும் இன்று பரப்புவதில்லை. பெரியார் பேசிய தத்துவங்களில் கடவுள் மறுப்பைத் தவிர, மற்றவை அனைத்தும் இஸ்லாத்தின் ஒளியில் அமைந்த உன்னதக் கோட்பாடுகள் என்பதை உரத்துச் சொல்வதற்கு இன்று எவரும் இல்லை.


'வழிபாடு செய்வதற்கு கட்டணம் கேட்காத ஒரு கடவுளை, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத ஒரு மதத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும்' என்று கேட்டவர் தந்தை பெரியார். மதங்களை எதிர்ப்பதையே தம் கொள்கையாகக் கொண்டு இயங்கிய பெரியாரால் எதிர்க்கப்படாத ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே என்ற உண்மையை இன்று எவரும் உரைப்பதில்லை.


இத்தகைய நிலையில் தான், பெரியாரை ஆழக்கற்ற பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். இஸ்லாம் குறித்து பெரியார் பேசியவற்றையும், இன்றைய பெரியாரிஸ்டுகள் பேசாமல் இருப்பவற்றையும் முஸ்லிம்கள் பெரியார் தாசன் மூலம் பேச வேண்டும். எழுத்துக்களாகவும், உரைகளாகவும், காட்சிகளாகவும் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.


இன்றைக்கு பிறசமய மக்களுக்கும்,இறை மறுப்பாளர்களுக்கும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் அழைப்புப் பணியில் பெரும் பின்னடைவு நிலவுகிறது. தஅவா எனப்படும் அழைப்பியல் தளத்தில் போதாமைகளும், குறைபாடுகளும் நீடிக்கின்றன.


தமிழகத்தைப் பொறுத்தவரை தலித் மக்கள் தான் அதிக அளவில் இஸ்லாத்தை தழுவுகின்றனர். சாதிய கொடுமைகளிலிருந்து விடுபடவும், சமூக அந்தஸ்த்தை தேடியும் அம்மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்கின்றனர். அவர்களுக்குரிய சமத்துவத்தை இஸ்லாம் அடுத்த நொடியே வழங்கிவிடுகிறது. ஆனால், சமூக ரீதியாகவும், பொருளாதார வகையிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து மதம் மாறி வரும் அம்மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முஸ்லிம்களாகிய நாம் வழங்குகிறோமா என்பதை ஆய்வு செய்யத்தான் வேண்டும்.


ஒரு தலித் கிராமம் இஸ்லாத்தை தழுவுகிறது என்றால் அந்த கிராமத்திற்கு முதலில் ஒரு பள்ளிவாசல் அவசியமாகிறது. அம்மக்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை அறிந்து கொள்வதற்கு ஒரு பயிற்சி மையம் தேவைப்படுகிறது. இஸ்லாமியக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கு நூல்களும், வெளியீடுகளும் வேண்டியிருக்கிறது. இவையனைத்தையும் தாண்டி அவர்களுக்கான வாழ்வியல் சிக்கல்களுக்கு வழிகாணவேண்டியிருக்கிறது.


ஒரு தலித், தலித்தாக இருக்கிறவரை அவரால் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடிகிறது. அரசின் சலுகைகள் அவருக்கு கிடைக்கிறது. ஆனால் அதே தலித் இஸ்லாத்திற்கு மாறுகின்ற போது அவரது ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளும் மறுக்கப்படுகிறது.


தலித்தாக இருப்பவர் அட்டவணைச் சாதியினராக அடையாளப் படுத்தப் படுகிறார். முஸ்லிமாக இருப்பவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராக அடையாளப் படுத்தப் படுகிறார். ஆனால், தலித்தாக இருப்பவர் முஸ்லிமாக மாறிவிட்டால் அவர் அட்டவணைச் சாதியிலும் இல்லை; பிற்படுத்தப் பட்டவராகவும் இல்லை என்ற நிலையை அடைகிறார். இஸ்லாத்தை தழுவுகின்ற தலித்துகள் எஸ்.சி யாகவும் இல்லாமல், பி.சி யாகவும் இல்லாமல் ஒ.சி யாக [இதர வகுப்பினர்] அடையாளப் படுத்தப் படுகிறார்கள். இதனால் தலித்துகளுக்கான உரிமையும் கிடைக்காமல், முஸ்லிம்களுக்கான உரிமையும் கிடைக்காமல் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாக அவர்கள் புறந்தள்ளப் படுகின்றனர்.


தலித்துகளை இஸ்லாத்தை நோக்கி அழைக்கவும், அம்மக்களுக்குத் தேவையான அடிப்படை அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் தஅவா பணியில் களமிறங்கிய சமுதாய அமைப்புகள் இத்தகையப் பிரச்சனைகளைக் கையிலெடுத்து தீவிரமாகக் களமாடி தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று பார்த்தால், அவர்களால் நிலைமை மேலும் மோசமாகியிருப்பதுதான் மிகப்பெரும் அவலம்.


அழைப்புப் பணிக்கு என்று சொல்லி பணவசூல் செய்யும் அமைப்புகள் அந்தப் பணத்தை முறையாக செலவிடுவதில்லை. வார்த்தைக்கு வார்த்தை தஅவா, தஅவா என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இயக்கங்களிடம் செயல்பாட்டளவில் தஅவா இல்லை. அரசியல் சமூகப் பணிகளில் ஈடுபடும் இயக்கங்கள் அவற்றை மட்டுமே முன்னிறுத்தினால் வசூலாகாது என்பதனால் பெயரளவில் தஅவா வையும் இணைத்துக் கொண்டுள்ளன. தஅவா வின் பெயரால் வசூலித்து விட்டு அதை வேறு வகையில் செலவிடுகின்றனர். தஅவா விற்காக வசூலிக்கப்படும் பணம் முழுமையாக அந்தப் பணிக்கு செலவிடப் பட்டிருக்குமானால் தமிழகத்தில் மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று ஆதங்கப் படுகின்றனர் மூத்த அழைப்பாளர்கள்.அமைப்புகள் தஅவா களத்தில் குதித்த பிறகு தஅவாவின் கண்ணியத்திற்கு பங்கம் நேர்ந்து விட்டது என்றும் அவர்கள் வேதனையடைகின்றனர்.


தொடக்க காலங்களில் 'இசாத்தே இஸ்லாம் சபை' உள்ளிட்ட சில மட்டுமே அழைப்புப் பணியில் ஈடுபட்டு வந்தன. அவர்களுக்குள் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், ஒரு அமைப்பு இன்னொரு அமைப்புடன் மல்லுக்கு நின்றதில்லை. அவரவர் வலிமைக்கு ஏற்றவாறு அமைதியாகவும், கண்ணியமாகவும் அவரவர் வழியில் அழைப்புப் பணியை முன்னெடுத்தனர்.


ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. ஒரு அமைப்பு வேலை செய்யும் இடத்திற்கு இன்னொரு அமைப்பு போனால் அங்கே அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. தஅவாவின் உயர்ந்த நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் குழாயடிச் சண்டையில் ஈடுபடுகின்றனர்.


அமைப்புகளின் இத்தகைய தவறான அணுகுமுறைகளால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு அழைப்புப் பணி செய்யச் சென்ற ஒரு அழைப்பாளர், அங்கு ஒரு தலித் இளைஞரிடம் இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அந்த இளைஞர், 'பாய் நீங்க விரலை ஆட்டுற கூட்டமா, அல்லது நீட்டுற கூட்டாமா' என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாத்தின் தனித்துவத்தையும், மேன்மையையும் எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில், முஸ்லிம்களின் தவறான நடவடிக்கைகளுக்கு விளக்கம் அளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது என்று நொந்து கொள்கிறார், அந்த அழைப்பாளர்.


இஸ்லாத்திற்கு வந்தவர்களை உள்வாங்கிக் கொள்வதிலும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டிருப்பதாக ஒரு பெரும் மனக்குறை இஸ்லாத்தை தழுவியவர்களிடையே நிலவுகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி, சமூகத்தில் பெரிய மனிதர்களாக அறியப்பட்டு பின்னர் இஸ்லாத்திற்கு வந்தவர்களையும் கூட முஸ்லிம் சமூகம் சரியான வகையில் உள்வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.


இஸ்லாத்தை தழுவிய ஆண்களுக்கு எளிதில் பெண் கிடைத்து விடுகிறது என்றும், இஸ்லாத்தை தழுவிய பெண்களுக்கு வாழ்க்கைத் துணை கிடைப்பதில் மிகப்பெரும் சிக்கல் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாத்திற்கு வந்த பெண்களை பாரம்பரிய முஸ்லிம்கள் மணமுடிப்பது மிக மிகக் குறைவு என்றும், அதனாலேயே பல பெண்கள், நீண்டகாலம் காத்திருந்தும் வாழ்க்கைத் துணை கிடைக்காமல், வேறு வழியின்றி இஸ்லாத்தை விட்டு வெளியேறி தமது பழைய உறவினர்களைத் திருமணம் செய்து கொள்வதாகவும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. 1980 களில் இந்தியாவையே திருப்பிப் பார்க்கச் செய்யும் வகையில் மத மாற்றம் நிகழ்ந்த மீனாட்சிபுரத்தில் இத்தகைய திருமணப் பிரச்சனைக்காகவே பல பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வருகின்றன.


முஸ்லிம் ஆண்களைக் காதலித்து அதனடிப்படையில் இஸ்லாத்தைத் தழுவும் பெண்களுக்கு பிரச்சனையில்லை என்றும், இஸ்லாத்தைக் காதலித்து மதம் மாறுகிற பெண்களுக்கு பெரும் சிக்கல் தான் என்றும் கூறி வேதனைப்படுகிறார் ஒரு மூத்த அழைப்பாளர்.


முஸ்லிம்களின் இத்தகைய மோசமான அணுகுமுறைகள் இஸ்லாத்தின் உன்னதத் தத்துவத்திற்கே எதிரானதும், இஸ்லாத்தை ஆழக் குழி தோண்டி புதைக்கிற செயலாகும்.


இந்தியச் சூழலில் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்கிறவர்கள், தங்களின் வேர் எது என்பதை ஆய்வு செய்யக் கடமைப் பட்டுள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் பல தலைமுறைகளுக்கு முன்னர் வேறு வேறு சாதியினராக இருந்தவர்களே. இஸ்லாத்தை எடுத்தியம்ப இந்த மண்ணிற்கு வருகை தந்த இறைநேசச் செல்வர்களின் அழகிய அணுகுமுறையினாலும், வியாபாரம் செய்ய வந்த முஸ்லிம் வணிகர்களின் நேர்மையான நடவடிக்கைகளினாலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்திற்கு வந்தவர்களாவர். அப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களாக மாறி விட்டாலும், அவர்களின் மனநிலையில் இந்த மண்ணிற்கேயுரிய பழைய சாதிய இறுக்கம் இன்னும் படிந்து கிடக்கிறது என்பதைத்தான் இன்றைய முஸ்லிம்களின் தவறான நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.


பிராமணச் சமூகம் தம்மைத் தவிர மற்ற இந்துக்கள் அனைவரையும் கீழ் நிலையில் வைத்துப் பார்ப்பதையும், அந்தச் சமூகத்தால் ஒடுக்கப்படுகிற நிலையிலுள்ள மற்ற சமூகங்கள் அனைத்தும், அது போன்றே தமக்கு அடுத்த நிலையிலுள்ள சமூகங்களிடம் நடந்து கொள்வதை நாம் பார்க்கின்றோம். பார்ப்பனர்கள் மற்ற இந்துக்கள் எல்லோரையும் ஒடுக்குவதையும், பார்ப்பனீயத்தால் பாதிக்கப்படுகிற தேவர்களும், வன்னியர்களும், பள்ளர்களும், பறையர்களும் ஒன்றிணைந்து பார்ப்பனீயத்தை எதிர்க்காமல் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது பாய்வதையும், தேவர்கள் பள்ளர்களை ஒடுக்குவதையும், வன்னியர்கள் பறையர்களை ஒடுக்குவதையும், பறையர்கள் எழுச்சி பெறுவதை பள்ளர்கள் விரும்பாததையும் நடைமுறையில் காண்கின்றோம். இதே மனநிலையில் தான் இஸ்லாத்தை ஏற்கனவே தழுவிய முஸ்லிம்கள், புதிதாகத் தழுவக் கூடிய முஸ்லிம்களிடம் நடந்து கொள்கின்றனர்.


முஸ்லிம்களின் இத்தகைய தவறான செயல்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்துத்துவ சக்திகளும், இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும், 'இஸ்லாத்தில் இணைந்தாலும் ஏற்றத் தாழ்வு நீங்குவதில்லை' என்று பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர். பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை. நந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை. நாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.


ஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர். இந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.


எனினும், அவர்கள் அவ்வாறு தவறான பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக முஸ்லிம்கள் செய்கின்ற தவறுகளை நியாயப் படுத்துவதும், அதை அப்படியே மூடி மறைப்பதும், அது குறித்து ஒரு திறந்த விவாதத்திற்கும், சுய பரிசோதனைக்கும் முஸ்லிம்கள் தயாராகாமல் இருப்பதும், பிரச்சனையை மேலும் வளர்க்குமே தவிர ஒருபோதும் பிரச்சனையை தீர்க்க உதவாது.


இந்தியச் சூழலில் இஸ்லாத்தில் ஒருவரை சேர்ப்பதை விட, அவரைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அழைப்பாளர்கள் கூறுகின்றனர். அதற்குத்தான் அதிக அளவில் உழைப்பும், பொருளாதாரமும் தேவைப்படுவதாக அவர்கள் கோருகின்றனர்.


கிராமங்களில் சென்று அழைப்புப்பணி செய்வதற்கு போதிய ஆள்பலம் இல்லை என்றும், அதற்கான உறுதியான கட்டமைப்புகள் இல்லை என்றும், இஸ்லாத்திற்கு வந்தவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உருவாக்கப் படவில்லை என்றும் குறைபடுகின்றனர்.


அழைப்புப் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் ஏதாவது ஒரு ஊருக்குச் சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களிடம், 'நீங்கள் என்ன தொழில் செய்கின்றீர்கள்? உங்கள் வருமானத்திற்கு என்ன வழி? என்பன போன்ற கேள்விகளையே திரும்பத் திரும்ப கேட்கிறார்களாம். அழைப்புப் பணி செய்கிறவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமைக்குரிய சமூகமே, இப்படி கேள்விகளைக் கேட்டு காயப்படுத்துவது பல அழைப்பாளர்களையும் மனச் சோர்வு அடையச் செய்துள்ளது.


ஒரு கிறிஸ்தவர் அழைப்புப் பணி செய்தால் அவரை எந்தக் கிறிஸ்தவரும் இது போன்று அவமதிப்பதில்லை. அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களை அம்மக்கள் 'புனிதப்பணி செய்யும் இறைப் பணியாளர்கள்' என்று சொல்லி மதித்துப் போற்றுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகத்திலோ இவற்றிற்கு நேர்மாறான அவலம் நீடிக்கிறது.


தமிழகத்தில் அழைப்புப் பணி செய்பவர்களிடையே எந்த விதமான உரையாடலும் இல்லை. அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. அழைப்பாளர்களிடையே சந்திப்புகள் இல்லை. வாழ்வாதாரத் தேவைகளுக்கு வழியற்ற நிலை தொடர்வதனால் பல மூத்த அழைப்பாளர்கள் இப்போது அழைப்புப் பணியே செய்வதில்லை. தஅவாவில் ஈடுபடுபவர்களுக்குள் உரையாடல் இல்லாததானால் எல்லோரும் ஒரே வேலையைச் செய்யும் அவலம் தொடர்கிறது. பணிகளைப் பகிர்ந்தளித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பணி செய்தால் தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். ஆனால், அதற்கான ஒருங்கிணைந்த மையமோ, தலைமையோ இதுவரை இல்லை.


ஏற்கனவே இஸ்லாத்தை தழுவிய கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ஏம்பல் தஜம்முல் முஹம்மத், பேராசிரியர் T.அப்துர் ரஹ்மான், டாக்டர் முனவ்வர்கான், TM.மணி என்ற உமர் முக்தார் போன்ற ஏராளமான ஆளுமைகளுக்குள் கூட உரையாடலற்ற நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து தலைநகர் சென்னையில் இயக்கச் சார்பற்ற ஒரு தஅவா மையத்தை நிறுவவும், தமிழகம் முழுவதும் அதன் கிளைகளை விரிக்கவும், அழைப்புப் பணியாளர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையை தொடங்கவும், அழைப்புப் பணியாளர்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பின்தங்கிய நிலையிலுள்ள கிராமங்களைத் தத்தெடுத்து இறைப்பணி ஆற்றவும், இவற்றுக்கெல்லாம் தேவையான பொருளாதாரத்தை ஒருமுகப்படுத்தவும், தஅவாவுக்காக வசூலிக்கிற பணத்தை தஅவா பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தவும், தஅவா தளத்தில் அமைப்புகள் ஏற்படுத்தி வைத்துள்ள தவறான முன்னுதாரணங்களைக் களையவும் பெரியார்தாசன் போன்ற ஆளுமைகள் முன்வர வேண்டும்.


புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களை பாரம்பரிய முஸ்லிம்கள் அணுகும் விதங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய பெரியார்தாசனால் முடியும். ஏனெனில், அவர் ஒரு மனோதத்துவ நிபுணர்.


அழைப்புப் பணியாளர்களிடையே நிலவும் அவநம்பிக்கைகளைப் போக்கி அவர்களை உளவியல் ரீதியாகத் தயார்படுத்தவும் பெரியார்தாசனால் முடியும். ஏனெனில்,அவர் ஒரு தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்.


அழைப்பியல் தளத்தில் எப்படி பேச வேண்டும்; எப்படிப் பேசி மற்ற மக்களை ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் புதிதாக உருவாகி வரும் இளைஞர்களுக்கும், ஏற்கனவே களமாடிக் கொண்டிருக்கும் மூத்தவர்களுக்கும் பேச்சுப் பயிற்சியளிக்க பெரியார்தாசனால் முடியும். ஏனெனில், அவர் ஒரு பேச்சுக் கலை நிபுணர்.


அவர் கடவுள் மறுப்பாளர்களுடன் உரையாடச் சரியான நபர். ஏனெனில், அவர் ஒரு முன்னாள் கடவுள் மறுப்பாளர்.


அவர் இந்துத்துவ வாதிகளுடன் உரையாடச் சரியான நபர். ஏனெனில், அவர் இந்துத்துவ தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர்.


அவர் புத்த பிக்குகளுடனும், கிறிஸ்தவ பாதிரிகளுடனும் உரையாடத் தகுதியானவர். ஏனெனில், அவர் பெளத்தத்தையும், கிறிஸ்தவத்தையும் நன்கு அறிந்தவர்.


அவர் ஆரியத்தை அறிந்தவர், பெரியாரியத்தைப் புரிந்தவர், அம்பேத்கரியமும், மர்ர்க்சியமும் கற்றுத் தெளிந்தவர். அந்தத் தளங்களில் நின்று உரையாடும் வல்லமை மிகுந்த ஒரே மனிதர்.


அவரை அந்தத் தளங்களில் பயன்படுத்துவதா, அல்லது அவரை அழைத்து ஊர் ஊராகக் கூட்டம் போட்டு 'பயான் நிகழ்ச்சிகள்' நடத்துவதா, என்பதை முஸ்லிம் சமூகம் முடிவு செய்யட்டும்
ஆளூர் ஷாநவாஸ்.
நன்றி : சமநிலைச் சமுதாயம்
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி